Saturday, February 12

    ஆர்பாட்டங்களும் ....
                 அனாதை கிராமங்களும் ....

                  கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் இந்தியாவின் தேச தந்தை காந்தியடிகள். மிக மிக சரியான கூற்று. இந்தியாவின் மனிதம் இன்றும் கெடாமல் இருப்பது கிராமங்களில் தான். மனிதத்தன்மை மட்டுமல்ல, மனிதன் வாழ்வதற்கு சுகாதாரமான காற்று முதல் சிறந்த உணவு வரை கிராமங்களில் தான் கொட்டிக்கிடக்கிறது. சுற்றத்தில் பிறப்பதும் தெரியாமல் , இறப்பதும் அறியாமல், அறிந்தாலும் அன்பு இல்லாமல், கடமைக்காக கண்டு கொண்டு அவரவர் தம் கடமையிலேயே கண் ஆயிரம் வைத்து நவ யுகத்தின் நாகரிகமாய் தோன்றும் நகர வாசிகளின் பார்வையில் மூன்றாம் அல்ல நான்காம் தர மக்களாய் அல்லது பட்டிக்காட்டானாய், இருக்கும் கிராமத்தான், பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு சக மனிதனின் வாழ்க்கையை தெரிந்து , குணங்களை அறிந்து அரவணைப்பை பெற்று, சுற்றத்தில் நடக்கும் ஒவ்வொரு சுக துக்கங்களிலும் தனக்கு ஏற்பட்டதை போன்று பிரதிபலிப்பதை பட்டிக்கட்டானிடமும், கிராமத்தானிடமும் தான் பார்க்க முடிகிறது.
                         ஆணுக்கு பெண் சரிசமம்தான் என்று போலித்தனமாய் பேசும் , ஆண்களின் வீடுகளில் அவர்களின் பெண்கள் கொடுமைபடுவதையும், பெண்களின் வீடுகளில் பெண்களால் சித்ரவதைக்கு ஆளானவர்களின் நல சங்கத்தின் உறுப்பினர்கள் நடமாடுவதையும், இவர்கள் பின்பற்றும் கலாச்சாரங்கள் ஓன்று கூட இந்தியாவின் கலாசாரத்தோடு ஒத்து போகாததை நம் கண்களால் காண முடிகிறது. செய்திகளால் அறிய முடிகிறது. ஆனால் பட்டிக்கட்டான்கள் பேணும் பெண்ணியத்தையும் .......( சமைத்தது சரி இல்லை என்று தட்டை தூக்கி எறிந்ததும் ஆணுக்கு பெண் நிகர் என்று சமைத்த பாத்திரத்தையே தன் தலையில் வாங்கிக் கட்டிக்கொண்டு நாகரிகமாய் நகர்வது நகரவாசிகளின் பெண்ணியம், சமைத்த சாப்பாடு சரியில்லை என்றாலும் சமைத்தவர்களின் மனது புண்படாமல் நன்றாக இருந்தது என்று மகிழ்ச்சி படுத்துவது கிராமத்தானின் பெண்ணியம் ) இவர்களிடம் உறவாடும் உண்மையான இந்தியாவின் கலாச்சாரத்தையும் இன்று அல்ல இறைவன் நாடினால் என்றென்றும் காண முடியும் நம் கிராமங்களில்.
                          இன்னும் நிறைய பல பல நல்ல விஷயங்களையும் , மனிதத்தன்மையுள்ள மனிதர்களையும் , கொண்டுள்ள கிராமங்களின் அடிப்படை வசதிகள் இன்று நாம் காணும் போது நம்மை கஷ்டப்படுத்துகிறது.

                 *  அவர்களின் வாழ்விடங்களின் சரியான வடிகால் இல்லாமல் தேங்கும் கழிவுகள்,
                 *  நடக்க கூட பாதை இல்லாமல் புண்ணாகும் கால்கள், 
                 * அவசர காலத்தில் காப்பாற்ற முடியாமலேயே போகும் உயிர்கள் , 
                 * படிப்பதற்கு இடம் இல்லாமலேயே படிப்பு வாசனை அறியாத இளந்தளிர்கள், 
                 * அப்படியே இருந்தாலும் வெளிச்சம் இல்லாமல் படிக்க முடியாமலேயே போகும் மேதைகள் ,
                 * கண்டுபிடித்தும் வெளிஉலகம் கண்டு கொள்ளாத விஞ்சானிகள் , 
                 * தான் கண்டு பிடித்ததை வெளியுலகம் களவாடியதை கண்டு குமுறும் அப்பாவிகள், 
                         இப்படியே இன்னும் அவர்களின் பல விசயங்கள் அடிப்படை வசதி இல்லாமலேயே முடங்கி விடுகின்றன.இந்த அடிப்படை வசதிகளுக்காக போராடும் போர்குனமிக்கவர்களால் நடக்கும் ஆர்பாட்டங்கள் .
                         இது நமது இந்தியாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இல்லை, மணியொரு மேனியும் நொடியொரு வண்ணமுமாக இருக்கிறது. அடிப்படை வசதிக்களுக்காக மட்டுமல்ல ஆர்பாட்டங்கள், விலைவாசி உயர்வு, அரசுக்கு எதிராக, எதிர் எதிர் கட்சிகளுக்கு எதிர் எதிராக, கட்சிகள் மட்டுமல்ல தன்னார்வ இயக்கங்கள், சுயஉதவிக்குழுக்கள், போன்றவர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். திணரடிக்கவும், குலுங்க வைக்கவும், ஸ்தம்பித்து போகவும் வைக்கிறார்கள் . ஆர்பாட்டங்கள் நடக்காத நாளே இந்தியாவில் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும், அந்த அளவுக்கு ஆர்பாட்டங்கள் , பேரணிகள், ஊர்வலங்கள்......... இவை அனைத்துமே சரிதான்.....!!!
                            ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களிலும் ,பேரணிகளிலும் ,ஊர்வலங்களிலும், என்ன பயன் என்பதே மிகப்பெரிய கேள்விக்குரியதாய் இருக்கிறது. ஆர்பாட்டக்காரர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் லட்சம் ஆர்ப்பாட்டங்களில் ஒன்றிரண்டு தான் ஆர்பாட்டம் ஏற்படக் காரணமாய் இருந்ததை சரி செய்ய முடிந்துள்ளது . அப்படியானால் மற்ற ஆர்ப்பாட்டங்களின் கதி........!!!!! ஆர்பாட்டம் நடக்கும் நாளில் அந்த ஆர்ப்பாட்டத்தை சவ பெட்டியில் மூடி புதைக்கத்தான் முடிகிறது.சவபெட்டியில் மூடி புதைக்கத்தான் அத்தனை  நபர்களும் குறிப்பிட்ட நாளில் திரள்கிறார்கள். இதை ஆர்பாட்டகாரகளால் ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் இது தான் கசப்பான உண்மை . ஆர்பாட்டத்தின் வெற்றி ஆர்பாட்டக்காரகளின் எண்ணிக்கையிலோ வந்த வாகனத்தின் எண்ணிக்கையிலோ அல்ல, ஆர்பாட்டத்தின் நோக்கம் சரிசெய்ய படுவதை தான் அதன் வெற்றி என்று சொல்ல முடியும் . 
                     சமீபத்தில் கூட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர் பேட்டியில் விலை வாசி உயர்வை எதிர்த்தும் ஊழல்களை எதிர்த்தும் பிப்ரவரியில் டெல்லியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடத்த போவதாக சொல்லி இருக்கிறார். அதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத சார்பற்ற கட்சிகளையும் , தொழிற்சங்கங்களையும் , ஓர் இயக்கமாக கொண்டு வந்து அனைவரும்  டெல்லியை நோக்கி செல்கிறார்களாம். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துவது ஒரு புறம் இருக்கட்டும். இந்த ஆர்பாட்டதினால் ஏற்படும் பயன் என்ன என்பது நம்மை போலவே ஆர்ப்பாட்டக்காரகளுக்கும் முன்கூட்டியே அதாவது இப்பொழுதே தெரியும். இவர்கள் கூடும் கூட்டத்தால் விலைவாசி இறங்குமா ? ஊழல் குறையுமா ? மனித உழைப்பும் பொருளாதார விரயமும் இந்த ஆர்ப்பாட்டங்களின் மூலம் சமூக சிந்தனையுடைய சில மனிதர்களான இந்த ஆர்ப்பாட்டக்காரகளின் மூலம் வீணாவதை கண்டு மனது கஷ்டப்படுகிறது. ........நிச்சயமாக இவர்கள்  சமூக சிந்தனையுடன் இருக்கிறார்கள்தான் ஆனால் இவர்களின் வழி தான் பலனில்லாமல் இருக்கிறது. 
                        இந்த அளவு மனித உழைப்பையும் பொருளாதாரத்தையும் இந்த கட்டுரையின் முற்பகுதியில் குறுப்பிட்ட அனாதை கிராமங்களின் அடிப்படை வசதிகள் செய்ய பயன்படுத்தினால்...........எப்படி இருக்கும் என்று நினைக்கும் போதே இந்தியா தன் முதுகெலும்பு துணையுடன் தலை நிமிர நடப்பது நம் கண் முன்னே தெரிகிறது.எந்த கட்சிகள் தனக்கு வாக்கு சேகரிக்க செல்லும் கிராமங்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது ....? எத்தனை இயக்கங்கள் செய்ததை சொல்லி மக்களின் மனதை கவர்கிறது..?  எந்த செய்தித்தாள்களை பிரிக்கும் போது இந்த கட்சி இத்தனை கிராமங்களை இந்தனை வருடத்திற்கு தத்தெடுத்துள்ளது என்று படிக்க முடிகிறது....?   ஏன் இதை கட்சிகளும் இயக்கங்களும் செய்ய முடியாதா என்ன ? சர்ரசரியாக ஒரு கணக்கு  வைத்துக்கொண்டால் கூட இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களினால் ஏற்படும் இழப்பு ஒரு வருடத்திற்கு  500 கோடியாவது இருக்கும் .                  

  • ஆர்ப்பாட்டக்காரர்களின் அந்த ஒரு நாள் வேலைக்கான  வருவாய் இழப்பு,
  • ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு செல்லும் பயண செலவு, 
  • ஆர்ப்பாட்டத்திற்கு வசூலாகும் தொகை, 
  • ஆர்ப்பாட்ட இடையூறுகளால் ஏற்படும் இழப்பு, 
  • ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் ஆர்ப்பாட்ட விளக்க கூட்டங்களினால் ஏற்படும் செலவு, 
          என்று அடுக்கிக்கொண்டே போகலாம். 500  கோடியை ஒரு குடும்பத்திற்கு சராசரி மாத செலவு 5000 ருபாய் ( நான்கு பேர் )என்று வைத்து பிரிக்கும் போது 10  லட்சம் குடும்பம் பயன்பெறுகிறது. ஒரு கிராமத்திற்கு சராசரியாக 500 குடும்பம் இருக்குமானால் மொத்தம் 2000   கிராமங்களை தத்தெடுக்கலாம். அதாவது இரண்டு மாவட்டங்களையே தத்தெடுக்க முடியும். குடும்பங்களுக்கு கொடுக்க வேண்டாம் என்றால் கிராமங்களின் அடிப்படை வசதிகள் செய்து தரலாம். கல்விச்சாலைகள் அமைத்து நாளைய மேதைகளை உருவாக்கலாம். இதனால் இந்தியாவின்  மத்தியில் உள்ள மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ஒரிசா, போன்ற மிக பின்தங்கிய மாநிலங்கள்  மிக சீக்கிரமாகவே முன்னேற்றமடையும்.௦ பிரச்சினை முடிந்த பிறகு சென்று ஆர்பாட்டம் செய்வதை விட ௦௦௦ பிரச்சினைக்கு முன்னரே சென்று சமூக பணிகளை செய்தாலே பிரச்சினை பின்னேறும் . மக்கள் முன்னேறுவார்கள்...ஆர்ப்பாட்டகாராகள் ஆட்சியாளர்களாகவும் சமூக சேவகர்களாகவும் மாறுவார்கள்........அனாதை கிராமங்கள் அமெரிக்காவிற்கு வகுப்பெடுக்கும்.................!!!!

அணையும் நேரத்தை
ஆவலுடன் எதிர்நோக்கும்....
இனா ஆனா.........
 ...........அன்வர்தம்பி...........

Wednesday, December 8

                 எமது இந்தியாவின் எதிர்கால இலட்சியங்கள் எல்லாமே எமக்கு மகிழ்ச்சி ஊட்டும் விதமாகத்தான் இருக்கிறது. இருக்காதா பின்னே...நான் இந்தியன் என்று உரக்க உலகுக்கு சொல்வதற்கு, என்னால் ஆன உதவியை எம் இந்தியாவின் இலட்சியத்திற்காக செய்ய என்னை எமது இந்தியாவின் லட்சியம் தூண்டிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவு பெருமைகள் வாய்க்க பெற்ற நாடு எம்நாடு. பல நூற்றாண்டு காலங்கள் எழுதிக்கொண்டே,பேசிக்கொண்டே இருக்கலாம் எம்நாட்டின் பெருமையை. 
                             சமீபத்தில் ஒரு மாத இதழில் அருந்ததி ராய் என்ற ஒரு தீவிரவாதியின் எழுத்துக்களை படிக்கும் பேறு கொண்டேன். " காஷ்மீரில் 68000 பேரை கொன்ற நாடு எப்படி ஒரு ஜனநாயக நாடாக இருக்க முடியும்? குஜராத்தில் 2500 ( ? ) பேரை இனப்படுகொலை செய்த நாடு எப்படி ஒரு மதசார்பற்ற நாடக இருக்க முடியும்? " என்று எமது இந்தியாவின் இறையாண்மையையே கேலிக்குரியதாக ( கேள்விக்குரியதாக ) மாற்ற பாடுபடும் இந்த தீவிரவாதியை எம் தேசம் பெற்றிருந்தாலும்,எம்தேசம் ஆங்கிலேயனால் அடிமைப்பட்டு கிடந்த போதுஅடக்குமுறையை கண்டு அஞ்சாமல் ஆங்கிலேயனை எதிர்த்த எம்தேச தீவிரவாதிகளையும், அவர்கள் இருக்கும் இடங்களையும் ஆங்கிலேயர்களுக்கு அறிமுகப்படுத்தி ( ? ) வைத்த எம் மேண்மைமிகு தேச பக்தர் திரு குருஜி வீர் சாவர்க்கர் போன்றவர்களையும் வரப்பிரசாதமாய் பெற்றது தானே எம்நாடு. இருக்காதா பின்னே தேச பக்தரின் தேச பக்தியை பறைசாற்றுவதற்காக தானே எம் நாட்டின் இறையாண்மையின் கருவறையாய் ( ? ) இருக்கின்ற பாராளுமன்றத்திலேயே படம் திறந்து ஆற்றிய பங்குகளையும் சொல்கின்றனர் எம் நாட்டின் இந்நாள் தேச பக்தர்கள். 
                               இது போன்ற தகுதிகளை தன்னகத்தே கொண்ட பல தேச பக்தர்களை உள்ளடக்கியது எம்நாடு. உலகிலேயே எந்த மனிதர்களும் தீண்ட முடியாத இடமாய் இருக்கும் கருவறையிலேயே தீண்டியது மட்டுமல்லாமல் நோண்டியும் எடுத்த எம் பெருமை மிகு சேவகர்களை கொண்ட தலைவரை எந்த குற்றமும் அறியாதவர் என்றும்,எந்த குற்றத்திற்கும் துணை போக வில்லை என்றும் நடுநிலையான தீர்ப்பு வழங்குமாறு அறிவுரை செய்த  விசாரணைக்குழுவில் எத்தனை எத்தனை எம்தேசத்தின் பக்தர்கள்.
                             எம் தேசத்தின் தேவையற்ற சுமைகளாய் இருக்கும் மனிதர்களை ( ஒரு சமயம் இவர்களும் தேசதுரோகிகளோ என்னவோ )....., அடித்து துரத்திய ஆங்கிலேயனை கொண்டு, அழித்து கொன்று, அரவணைத்து அழகாய் அனுப்பிய தேச பக்தர்களும் எம் நாட்டில் உண்டு. இந்த தேசிய பக்தி செயலை பல ஆண்டுகளுக்கு பிறகு பண்பட்ட அறிவுடன் பரிந்து முடிவுரை எழுதிய அண்ணல் அம்பேத்கர் உருவாக்கியதில் மேதைகளாகவும் அரசர்களாகவும் உள்ள தேச பக்தர்களையும் எம்நாடு கொண்டுள்ளது. 
                            மனைவியின் சுகத்தை பெற்று,பிள்ளைகளின் அன்பைப் பெற்று வாழும் தேச துரோகிகளுக்கு மத்தியில், எம்நாடே மனைவி, எம்நாட்டின் மக்களே எம் பிள்ளைகள், என்று  எந்நேரமும் என்நாட்டுக்காக உழைத்துக்கொண்டு இன்னும் அதிகமாய் அழிப்பதற்காக...........மன்னிக்கவும், உழைப்பதற்காக பிரதமர் ஆக வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டே இருக்கும் மக்கள் தொண்டர் திருஜி லால் கிருஷ்ண அத்வானி போன்ற தேச பக்தர்கள்.
                               மண்ணின் மைந்தர்கள் என்று சொல்பவர்களுக்கு விண்ணில் தான் இடமுண்டு என்று மிருதுவான முறையில் மண்ணுக்குள் புதைத்து விண்ணுக்கு அனுப்பியும், மற்றவர்களின் தாயகத்தை தான் தாயகமாய் மாற்றிய உலக பக்தர்கள் இஸ்ரேலியர்களை போன்று தான் நாமும் செய்ய வேண்டும் என்று மிக சிறந்த உதாரணத்தை ரத்தங்களுக்கு சொல்லும் எம் தேசபக்த தலைவர்கள்.
                              உண்ண உணவின்றி இருக்க இடமின்றி சொகுசாக நடைதெருவில் சுற்றி திரிந்து வாழும் மனிதர்களுக்கு மத்தியில்,உண்ணுவதற்கு உலகிலேயே தலைசிறந்த உணவு,உடுப்பதற்கு மிக அழகான உடுப்பு இருந்தும் எளிமையாய் என்றுமே தோன்றும் திரு பால் தாக்கரே போன்ற தேச பக்தர்கள்.
                            தம் தாய் மண்ணிற்காக போராடுகிறோம் என்ற தவறான கொள்கையுடன் போராடும் தீவிரவாதிகளுக்கு  மத்தியில், தம் தேசத்திற்காக கற்பழிக்கிறோம், தம் தேசத்திற்காக ஊனப்படுதுகிறோம்,தம் தேசத்திற்காக கொலை செய்கிறோம் என்று எம்மக்களுக்காக போராடும் எம் ராணுவ தேச பக்தர்கள்.
                           தேவை இல்லாத சுமைகளை எம்நாட்டின் மடியில் இருந்து தூள் தூளாக சிதறடித்து அகற்றிய தேச பக்தை செல்வி பிரக்யா சிங் போன்றவர்களை சுட்டிக்காட்டிய தேச துரோகி ஹேமந்த் கர்கரேயை எம் பரிசுத்த தேசத்திலிருந்து அகற்றி தன்னைக்கூட விளம்பரப் படுத்திக் கொள்ளாத எம் தேச பக்தர்கள்.
                          அடுத்த நாட்டைக் காட்டிகொடுத்து தன் நாட்டில் வெகுமதி பெற்றும் அடுத்த நாட்டையே தன் நாடகக் கருதி சகல சௌபாக்கியங்களுடன் எம்நாட்டில் வாழும் திரு சுப்ரமணிய சுவாமி போன்ற தேச பக்தர்கள்.
                            தன் நாட்டிற்கு அற்பனிப்பதர்க்காக தனது உழைப்பான தனது சொத்தை பிரிக்கும் போது கொலையுண்ட திரு பிரமோத் மகாஜன் போன்ற தேச பக்த ஆத்மாக்கள்.
                             எங்கு தடை செய்யப்பட்டாலும் எம் நாட்டின் வாசற்கதவை திறந்து பன்னாட்டு கம்பெனிகளின் பரிசோதனைக் கூடமாய் எம் நாட்டை மாற்றிய வெள்ளை உடுப்பு தேச பக்தர்கள்.
                           அதிக அதிகமாய் குளு குளு மலையிலே கொஞ்சும் மேகங்களுக்கு  இடையில் எம்தேச மக்களின் நலனுக்காக ரத்தம் சிந்தி உழைக்கும் ரத்தத்தின் ரத்தக்களாய் இருக்கும் தேச பக்தைகள்.
                          எம் நாட்டின் கடனை அடைத்து எம்நாட்டு மக்கள் நிமிர்ந்த தலையுடனும்,நேரான பார்வையுடனும் உலக அளவில் மதிப்பு மிக்கவர்களாய் இருக்க எமக்காகவும்,எம் தேச மக்களுக்காவும் தன் சொந்த உழைப்பில் ஈட்டியதை சுவிஸ் வங்கியில் சேமிக்கும் எம் அரசியல் தேச பக்தர்கள்,
                            இதைபோன்று பலதரமான தரமான வாழ்ந்த தேச பக்தர்களையும்,வாழ்ந்துக்கொண்டிருக்கிற தேச பக்தர்களையும் ,முன்மாதிரியாக கொண்டு இன்னும் சம இடங்களில் இதே போல மிக உயர்ந்த குணமுள்ள தேச பக்தர்களை பார்த்துக்கொண்டே எம் நாட்டின் லட்சியத்தை அடைய கனவு காண்கிறேன் நான்..........2020 - ல் எம்நாடு இது போன்ற தேசபக்தர்களை உள்ளடக்கிய வல்லரசாக......?
                 மறந்தே போய் விட்டேன் நான் இந்த கட்டுரைக்கு தலைப்பிடுவதற்க்கு,அதனால் தான் கடைசியில் தலைப்பிடுகிறேன்......
வல்லூறுகளின் வல்லரசு..........( எம்நாடு 2020 - ல் )

அணையும் நேரத்தை 
அன்புடன் அழைக்கும் ...இனா ஆனா 
அன்வர்தம்பி